×

மறைமலைநகர் பாமக பிரமுகர் படுகொலை ஏன்?: 4 பேர் கைது; திடுக் தகவல்கள்

செங்கல்பட்டு: மறைலைநகர் பாமக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் காளி (40). பாமக பிரமுகரான இவர், மறைமலைநகர் நகர வன்னியர் சங்க தலைவராக இருந்து வந்தார். மேலும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ளனர். நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் காளி டீ குடித்து கொண்டிருந்தார்.

அப்போது, பைக் மற்றும் காரில் வந்த மர்ம கும்பல் டீக்கடைக்குள் புகுந்து, காளியை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. சம்பவ இடத்திலேயே பயங்கர அலறல் சத்தத்துடன் காளி, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து மர்ம கும்பல், வாகனங்களில் தப்பி சென்றது. மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் குற்றவாளிகளை போலீசார் விரட்டியபோது, ஊரப்பாக்கம் சிக்னல் அருகே பைக்கை போட்டு விட்டு மர்ம நபர்கள் தப்பிக்க முயற்சித்தனர். அப்போது, விக்னேஷ்வரன் என்பவர் மட்டும் சிக்கினார். அவரை பிடித்து வந்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். இதில் தெரியவந்த திடுக் தகவல்கள் வருமாறு:

கடந்த மே 23ம் தேதி நின்னக்காட்டூர் பகுதியை சேர்ந்த கொளிசிக், சஞ்சய் ஆகியோரை மறைமலைநகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சபரி கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இதுகுறித்து நின்னக்காட்டூர் பகுதியை சேர்ந்த வன்னியர் சங்க தலைவர் காளி சமரசம் பேசியுள்ளார். அதன் பிறகு கௌசிக், சஞ்சய் ஆகியோர் காட்டூர் பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன் சேர்ந்து சபரி கும்பலை சேர்ந்த விக்னேஷ்வரனின் தம்பியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இச்சம்பவத்திற்கு பின்னால் காளி இருப்பதாகவும் நின்னகாட்டூர் பகுதியில் அனைத்து பிரச்னைகளிலும் காளி தலையிட்டு வருவதாகவும் அவருக்கு நின்னகாட்டூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் துணை நிற்பதாலும், அவரை வளர விடக்கூடாது என சபரி கும்பல் முடிவு செய்துள்ளனர். அதன்படி காளியை கொலை செய்ய திட்டமிட்டு அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தபோது நேற்று சபரி (எ) சபரேசன் தலைமையில் விக்னேஷ்வரன், வெங்கி (எ) வெங்கடேஷ்வரன் உள்பட 6 பேர் கும்பல் காளியை வெட்டி கொன்றுள்ளனர். இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, வெங்கி (எ) வெங்கடேஸ்வரன், சபரி (எ) சபரேசன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மறைமலைநகரில் தொடர்ந்து வன்னியர்கள் கொலை செய்யப்பட்டு வருவதாகவும் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டியதோடு மறைமலைநகர் காவல்நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரை கண்டித்து மறைமலைநகர் தேசிய நெடுஞ்சாலையில் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

The post மறைமலைநகர் பாமக பிரமுகர் படுகொலை ஏன்?: 4 பேர் கைது; திடுக் தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Bamakha Pramukhar ,Karamalai Nagar ,Chengalpattu ,Kiramalainagar ,Kattur ,Dinakaran ,
× RELATED தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் மோதல்..!!